

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள அசோக் விஹாரில் 5 மாடி கட்டிடம் ஒன்று நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 3 சிறுவர்கள், ஒரு சிறுமி மற்றும் 2 பெண்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ஈடுபட்டு உள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்றும், அது இடிந்து விழும் நிலையில் இருந்ததாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.