

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மாநில போலீஸ் மற்றும் ராணுவம் உதவியை செய்து வருகிறது. விசாரணையில் முக்கிய தகவலாக பயங்கரவாதி பயன்படுத்திய கார் மாருதி இகோ எனவும், காரின் சேசிஸ் எண் MA3ERLF1SOO183735 எனவும், எஞ்ஜின் எண் G12BN164140 எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜலில் அகமத் ஹகானி வாங்கியுள்ளார். இதனையடுத்து 7 பேருக்கு கைமாறியுள்ளது. இக்கார் கடைசியாக பிப்ரவரி 4-ம் தேதி சாஜ்ஜத் பாத் வசம் வந்துள்ளது.
இதனையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு, உள்ளூர் போலீஸ் உதவியுடன் சாஜ்ஜத் பாத் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர். அவர் அங்கு இல்லை. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது.