

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, பல்கலைக்கழக வேந்தரான கவர்னருக்கும், துணைவேந்தர்களுக்கும் இடையே மோதல் நடக்கிறதா? அதை தடுக்க கொள்கை வகுக்கும் திட்டம் உள்ளதா? என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் கூறியதாவது:-
பல்கலைக்கழகங்களில் தரமான ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 2018-ம் ஆண்டு ஒழுங்குமுறைகளை வகுத்து வெளியிட்டது. அதே சமயத்தில், பல்கலைக்கழக வேந்தரான கவர்னருக்கும், துணைவேந்தருக்கும் இடையே மோதல் நடப்பதாக மாநில அரசுகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. தகுதியான, திறமையான துணைவேந்தர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க ஆணையம் ஒன்றை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.