என்.ஆர்.சி-யை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம்

என்.ஆர்.சி. கணக்கெடுப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடந்தேறின.
representational Image:PTI
representational Image:PTI
Published on

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தில் சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் தேசிய குடிமக்கள் பதிவேடு என்னும் என்.ஆர்.சி. தயாரிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இதன் இறுதி விவரங்களின்படி மாநிலத்தில் 19 லட்சத்துக்கு மேற்பட்டோர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருந்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மேற்படி என்.ஆர்.சி. கணக்கெடுப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடந்தேறின.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போது வரை, தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், குடியுரிமை சட்டம் 1955-ன்படி தடுப்புக்காவல் மையங்கள் அமைக்க எந்த வழிமுறையும் இல்லை எனக்கூறினார். அதேநேரம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் உள்ளூர் தேவைகளுக்காக இந்த மையங்களை அமைத்துள்ளன எனவும் அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com