

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விதிமுறைகள் மீறல்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது அலையில் பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ளன.
தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. அப்படியிருக்க தேவையில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது ஐகோர்ட்டு விதிமுறைக்கு எதிரானது. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் சொல்ல வேண்டும்.
ரங்கசாமியே பொறுப்பு
புதுவையில் தொற்று பாதிப்பு அதிகமானால் அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தான் பொறுப்பு. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையிலும் மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவை அரசு மிகவும் மெத்தனமாக உள்ளது. இது வேதனை அளிக்கிறது.
புதுவையில் முதல் தவணை தடுப்பூசியை 70 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 40 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். புதுவையில் குறைந்த அளவிலேயே மக்கள்தொகை உள்ள நிலையில் அவர்களுக்குக்கூட முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை. பொருளாதாரம், வேலைவாய்ப்பை பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை.
பிரதமரை சந்திக்காதது ஏன்?
தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கேட்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அப்போது காங்கிரஸ் ஆட்சி என்பதால் மாநில அந்தஸ்து தரவில்லை. தற்போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு தான் உள்ளது.
அப்படியிருக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்து அழுத்தம் கொடுக்காதது ஏன்? பா.ஜ.க. அரசு புதுவை மக்களை வஞ்சிக்கிறது. மாநில அரசு கேட்கும் நிதியை தருவதில்லை. புதுவை அரசில் கடந்த 6 மாதமாக அதிகார சண்டைதான் நடக்கிறது.
ஊழல் மலிந்துவிட்டது
புதுவை அரசு புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றவில்லை. கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை உயர்வு போன்றவை நாங்கள் கொண்டு வந்த திட்டம்தான். என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. லஞ்சம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இதற்காக ஒருநாள் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.