

புதுடெல்லி,
ஈரான் தொடர்பான வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலராக இருந்த விலை, 110 டாலர் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுகளைப் பொருட்படுத்தாமல், உள்நாட்டில் எரிபொருள் விலையை மாற்றாமல் வைத்திருப்பதே "எரிபொருள் விலை முடக்கம்" ஆகும். பொதுவாக தினசரி விலை மாற்றம் நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்களுக்கு சுமை ஏற்படாமல் இருக்க எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலையை மாற்றாமல் வைத்திருக்கின்றன. இதனால் அவற்றுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.
இந்த இழப்பை சமாளிக்க, சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை வாங்கும் சுத்திகரிப்பு மாற்றுக் கட்டணம் மீது தள்ளுபடி வழங்கும் புதிய நடைமுறையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன. 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்த இந்த முறையின் கீழ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை டீசல், விமான எரிபொருள், மண்ணெண்ணெய் போன்றவற்றை சந்தை விலையை விடக் குறைவான விலையில் வாங்குகின்றன.
ஏப்ரல் முதல் பாதிக்கான காலத்தில், டீசலுக்கான சுத்திகரிப்பு கட்டணமாக ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.60 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை நிறுவனங்களின் நிதிச்சுமை சுத்திகரிப்பு நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் சுமார் 90 சதவீதத்தை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களே இயக்குகின்றன.