டெல்லி சாமியாருக்கு உதவிய 2 பெண்கள் கைது


டெல்லி சாமியாருக்கு உதவிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 1 Oct 2025 2:18 PM IST (Updated: 1 Oct 2025 2:19 PM IST)
t-max-icont-min-icon

விமான பணிப்பெண்களுடன் சாமியார் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சிருங்கேரி மட ஆசிரமத்தில் சாமியாராக இருந்த சைதன்யானந்தா என்கிற பார்த்தசாரதி (வயது 62), மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த 28-ந் தேதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

போலீசார் அவரது மொபைல் போன்களை ஆய்வு செய்தனர். அதில் பல மாணவிகளின் புகைப்படங்கள் இருந்தன. பல மாணவிகளை அவர் தனது வலையில் வீழ்த்தியதற்கான உரையாடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது தவிர விமான பணிப்பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். இவற்றையெல்லாம் கொண்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். ஆனால் அவர் போலீசாரின் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேற்கண்ட ஆதாரங்களுக்கு அவர் பிடி கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே சாமியாருக்கு ஆதரவாக செயல்பட்ட 2 பெண்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் தனியாக விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story