ஓணம் பண்டிகை உற்சாகம்: 25,000 சதுர அடியில் அசுர அளவிலான பூக்கோலம் அமைத்து அசத்தல்

பல்வேறு வண்ணங்களிலான பல டன் எடையுள்ள விதவிதமான பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஓணம் பண்டிகை உற்சாகம்: 25,000 சதுர அடியில் அசுர அளவிலான பூக்கோலம் அமைத்து அசத்தல்
பூக்கோலம்
Published on

வயநாடு,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட பூக்கோலம் அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை

கேரள மக்கள் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடின்றி, மகிழ்ச்சியோடு கொண்டாடும் பாரம்பரிய திருவிழா ஓணம் பண்டிகை ஆகும். ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மாபெரும் பரப்பளவு

ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வயநாட்டில் உள்ள மைதானத்தில் சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில் இந்த அத்தப்பூக்கோலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அசுர அளவிலான பூக்கோலத்தை வடிவமைக்க, பல்வேறு வண்ணங்களிலான பல டன் எடையுள்ள விதவிதமான பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பின்னணியில் உழைப்பு

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினர் ஒன்றிணைந்து, பல மணி நேர கூட்டு உழைப்பால் இந்த அழகிய பூக்கோலத்தை உருவாக்கியுள்ளனர். காண்போரை வியப்படைய செய்யும் இந்த பிரம்மாண்ட பூக்கோலத்தைக் காண, வயநாடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர்.

கேரளாவின் பாரம்பரிய கலைநயத்தையும், மக்களின் ஒற்றுமையையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த பிரம்மாண்ட முயற்சி அமைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com