

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 95 ஆயிரத்து 152 பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் முழுவதும் நிரம்பியிருந்த நிலையில் சிலாதோணம் பகுதி வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எஸ்.எஸ்.டி.எனப்படும் 'டைம் ஸ்லாட் டோக்கன்' இல்லாமல் வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 15 முதல் 18 மணி நேரம் வரை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமையன்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.4 கோடியே 44 லட்சம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்றைய தினம் 40 ஆயிரத்து 601 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதாகவும் 4 லட்சத்து 21 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் 2 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி அன்னபிரசாதம் வழங்கப்பட்டதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று 3 ஆயிரத்து 830 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.