மராட்டியத்தில் நீட் முறைகேடு தொடர்பாக ஒருவர் கைது

நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை 9 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டியத்தில் நீட் முறைகேடு தொடர்பாக ஒருவர் கைது
Published on

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு தொடர்பாக குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் முறைகேடு நடந்ததாக கூறப்படும் இடங்களில் சோதனையும் நடந்துவருகிறது.

இந்த நிலையில் மராட்டியத்தின் லத்தூரை சேர்ந்த 2 அரசு பள்ளி ஆசிரியர்கள் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை வெற்றிபெற வைப்பதற்காக ரூ.5 லட்சத்துக்கு மேல் கேட்டதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா என்பவரிடம் நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அவரை நேற்று அதிகாரிகள் கைது செய்தனர்.

இதன் மூலம் நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இதுவரை கைது செய்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பீகாரை சேர்ந்த 6 பேர், கோத்ரா மற்றும் டேராடூனில் இருந்து தலா ஒருவர் என 8 பேரை சிபிஐ கைது செய்திருந்தது.

இதைப்போல நீட் முறைகேடு தொடர்பாக 6 வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பீகாரில் வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், குஜராத், ராஜஸ்தான், மராட்டியத்தில் ஆள்மாறாட்டம், முறைகேடு போன்ற மோசடிகள் தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com