

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி ஈடுபட்டதால மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தினமும் அமளி துமளியுடன் நடந்து கொண்டிருக்கிறது. இன்று கூட்டத்தொடரின் 17-வது நாள் அமர்வு நடைபெற்றது.
காலை 11 மணிக்கு மக்களவை கூடியபோது சபாநாயகர் ஓம்.பிர்லா இருக்கையில் அமர்ந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் அவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு கூடியபோது மக்களவையில் அமளி காரணமாக அவை செயல்படால் மதியம் 2 மணி வரை முடங்கின. ஜூலை 20ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, பல மசோதாக்கள் விவாதமின்றி அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.
இந்த சூழலில் அவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:
டெல்லியில் போராட்டத்தில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
சபை எந்தவித இடையூறும் இன்றி செயல்படும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய மற்ற பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கலாம். முக்கிய மசோதாக்கள் மீது சபையில் விவாதம் நடைபெற ஏதுவாக, அரசும், எதிர்க்கட்சியும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வர வேண்டும்.
எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்பிக்கள் ஒருமித்த கருத்தை எட்டி ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபட வேண்டும். சபை செயல்படாதபோது நான் வேதனைப்படுகிறேன். பார்லிமென்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால், சபைக்குள் பதாகைகளை எம்பிக்கள் யாரும் காண்பிக்க கூடாது.
கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுவதைக் காண விரும்புகிறார்கள் என்றார்.
இதைத்தொடர்ந்து கூட்டுறவுத் துறை இணை மந்திரி முரளிதர் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026-ஐ முன்மொழிந்தார். தொடர்ந்து நிலவிய அமளிக்கு மத்தியிலும் அந்த மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களில், இரண்டு மீது மட்டுமே விவாதம் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள சட்டங்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி தொடர்ந்ததால், மக்களவை நாளை (ஆகஸ்ட் 12) காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்ந்து நடந்து வருகிறது. அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீண்டும் கூடி நடந்து வருகிறது.