

புதுடெல்லி
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, வந்தே மாதரம் பாடல் தொடர்பான தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், வந்தே மாதரம் தேசிய பாடலை அவமதிப்பது என்பது ஒரு குற்ற செயல் என குறிக்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.
எனினும், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட விவகாரம் தொடர்பாகவும் மேகதாது விவகாரம் தொடர்பாகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை இன்று 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின்னர் அவை மீண்டும் கூடியபோது, அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ், மசோதா தொடர்பாக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளித்தபோது, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதற்கு மத்திய மந்திரி நித்யானந்த ராய் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசினார். சுதந்திர போராட்ட நிகழ்வை நினைவுகூரும் வகையிலான, கலாசார பாரம்பரியம் கொண்ட இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும் ஏன் எதிர்க்கின்றனர்? என தெரியவில்லை என்றார்.
இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசின. இந்த மசோதாவை கடந்த 24-ந்தேதி மத்திய இணை மந்திரி நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தபோதும், பல நாட்களாக அது நிறைவேறாமல் தள்ளிப்போனது.
இந்த சூழலில், எதிர்க்கட்சியினரின், கடும் அமளிக்கு இடையே, அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேறியது. இதனால், வந்தே மாதரம் தேசிய பாடலை அவமதிப்பவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட கூடும். இதேபோன்று, குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறியது.