

லடாக்,
'எங்கள் நோக்கம் தெளிவானது' என்று கார்கில் வெற்றி தினத்தன்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
லடாக்கின் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், 27வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ராஜ்நாத் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாவது:-
பாகிஸ்தானின் ஒவ்வொரு "தவறான செயலுக்கும்" "அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட" ஒரு பதிலடி கொடுக்கப்படும். எங்கள் நோக்கம் தெளிவாக உள்ளது. இனி பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியைப் பற்றி மட்டும் தான்.
பயங்கரவாதத்தை உருவாக்குவது பாகிஸ்தான் அரசின் ஒரு கொள்கையாக இருக்கிறது. பாகிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்படுகிறது.
எனவே, பயங்கரவாதிகளையும், பாகிஸ்தான் அரசாங்கத்தையும் இனி இந்தியா தனித்தனியாக பார்க்காது என்பதைத் ஆபரேஷன் சிந்தூரின் போது நாங்கள் தெளிவுபடுத்தினோம். புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி என்பதில் தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், மற்ற நாட்டுக்குள் ஊடுருவுவது மற்றும் பயங்கரவாதம் போன்ற வேலைகளைத் தான் பாகிஸ்தான் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.