

புதுடெல்லி,
மத்திய அரசு கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாநிலங்களின் கையிருப்பில் 2.07 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 52 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரத்து 710 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கி இருக்கிறது. அவற்றில் இதுவரை 51 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 562 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இதனால் தற்போது கையிருப்பில் 2,07,55,852 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் கையிருப்பில் உள்ளன. அடுத்த சில நாட்களில் 48 லட்சத்து 43 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது என்று அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.