டெல்லி-டேராடூன் விரைவுச் சாலை அமைக்க வெட்டப்பட்ட 7,500 மரங்கள்

இந்த விரைவு சாலை வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காட்டின் நடுவே அமைக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நொய்டா,

தலைநகர் டெல்லி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் இடையே 212 கி.மீ. தூரத்துக்கு 6 வழித்தட பசுமை சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

ரூ.12 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலை வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காட்டின் நடுவே அமைக்கப்படுகிறது.

டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரத்தை 2 மணி நேரமாகக் குறைக்கும் இந்த சாலை அடுத்த ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நொய்டாவை சேர்ந்த சமூக ஆர்வலரான அமீத் குப்தா என்பவர் டெல்லி-டேராடூன் விரைவு சாலைக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்து இருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

டெல்லி-டேராடூன் விரைவுச் சாலையில் கிட்டத்தட்ட 16 கிமீ நீளமுள்ள பகுதியில் 7,575 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதை ஈடுசெய்ய 1,76,050 மரங்கள் நடப்பட உள்ளன. மேலும் மரங்கள் வெட்டப்பதற்காக உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் வனத்துறைக்கு மொத்தமாக ரூ.3,60,69,780 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com