பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் கண்டெடுப்பு - எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை

பஞ்சாப் எல்லையில் உள்ள வயலில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் கண்டெடுக்கப்பட்டது.
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் கண்டெடுப்பு - எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியில் ஷாபூர் கோரயா என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு சவீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான வயலில் அறுவடை நடைபெற்றது. அப்போது அங்கு ஒரு டிரோன் செயலிழந்து கீழே விழுந்து கிடப்பதை அங்கிருப்பவர்கள் கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பஞ்சாப் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன்கள் போதைப்பொருள், வெடிபொருட்கள் ஆகியவற்றை கடத்துவதற்காக பயன்படுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த சூழலில் வயலில் இருந்த டிரோன் குறித்து தகவல் கிடைத்தவுடன், தேரா பாபா நானக் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்று டிரோனை கைப்பற்றிய போலீசார், அது பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதை உறுதி செய்தனர். அந்த டிரோனில் பேட்டரிகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com