‘எங்கள் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள்’ - அபிஜித் தீப்கே

கடந்த ஒரு மாத காலத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
‘எங்கள் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள்’ - அபிஜித் தீப்கே
Published on

புதுடெல்லி,

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிந்து வருவதால், தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தங்கள் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்த போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் கடந்த ஒரு மாதமாக இங்கே அமர்ந்திருக்கிறோம், இந்த ஒரு மாத காலத்தில் இது போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை.

ஆனால் இப்போது, ​​இந்த போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக பா.ஜ.க. தரப்பில் இருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள். கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களே ஆவர். காவல்துறையினர் லாரிகள் நிறையக் கற்களை இங்கே கொண்டு வந்து கொட்டுகிறார்கள். பா.ஜ.க. குண்டர்கள் வந்து கற்களை வீசிவிட்டு, பின்னர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்தவர்களை களங்கப்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com