

புதுடெல்லி,
உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி கனடாவில் உள்ள ஒன்டாரியாவில் நடைபெற்றது. இதில் உலகதர வரிசையில் 20- வது இடத்தில் உள்ளவரும், இந்த போட்டியின் முதல் நிலையில் உள்ளவருமான இந்திய வீராங்கனை அனகத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற கணக்கில் எகிப்தைச் சேர்ந்த ருகையா சலீமை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அவர் படைத்தார். இந்த நிலையில், அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தங்கப்பதக்கம் வென்று, உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ள அனகத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவரது இந்த மகத்தான சாதனை, இந்திய இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் என்பதில் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.