

புதுடெல்லி
பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் செல்கின்றனர்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுகிறார். இந்திய பிரதமர் என்ற அளவில் இது முதல் முறையாகும். இஸ்ரேலில் அவர் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து அவர்களுடன் உரையாட உள்ளார். பயண திட்டத்தின்படி, அந்நாட்டின் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜோக்கையும் நேரில் சந்தித்து பேச உள்ளார்.
எனதருமை நண்பர் அழைப்பின் பேரில் இஸ்ரேல் செல்கிறேன் என குறிப்பிட்ட பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு புறப்படுவதற்கு முன்பு வெளியிட்ட செய்தியில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் தொடர்ந்து முன்னேறி செல்லும் இரு நாடுகளும் வலுவான மற்றும் பன்முக தன்மை கொண்ட நட்புறவை பகிர்ந்து கொண்டுள்ளன என தெரிவித்து உள்ளார்.
இந்த பயணத்தில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, விவசாயம், நீர் நிர்வாகம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் உள்ள நம்முடைய ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்தும் நோக்கிலான விவாதங்களுக்காக நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.