

புதுடெல்லி,
நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
ஒருவழியாக கொரோனா அரக்கன் விடைபெற்றுவிட்டான் என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நிலையில் மீண்டும் அது மெல்லத் தலைதூக்குகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வௌயிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஒரு நாளில் 2 ஆயிரத்து 483 தொற்றுகளுடன், நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 636 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிதாக 1,347 உயிரிழப்புகளுடன் மொத்த பலி 5 லட்சத்து 23 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வழங்குவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.