விலைவாசி உயர்வின் நாயகன் மோடி - காங்கிரஸ் கடும் விமர்சனம்

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 3 ஆயிரத்து 237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலைவாசி உயர்வின் நாயகன் மோடி - காங்கிரஸ் கடும் விமர்சனம்
Published on

டெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.

இதனிடையே, மாதத்தின் முதல் நாளான இன்று நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்த்தப்பட்டு ரூ. 3 ஆயிரத்து 237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வணிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு நுகர்வோருக்கு (வாடிக்கையாளர்கள்) நேரடி பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

இந்நிலையில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மோடி விலை உயர்வின் நாயகன் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், விலை உயர்வின் நாயகன் மீண்டும் சாட்டையால் அடித்துள்ளார். இன்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ. 993 உயர்ந்துள்ளார்.

மோடி கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதன் விவரம்:-

ஜனவரி 1 - ரூ. 111

பிப்ரவரி 1 - ரூ. 50

மார்ச் 1 - ரூ. 31

மார்ச் 7 - ரூ. 115

ஏப்ரல் 1 - ரூ. 218

மே 1 - ரூ. 993

மொத்தம் ரூ. 1 ஆயிரத்து 518

கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1 ஆயிரத்து 518 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 8 மாதங்கள் உள்ளன.

இவ்வாறு பதிவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com