இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய காங். எம்.பி சசி தரூர்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறு சுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது' என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டி உள்ளார்.
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய காங். எம்.பி சசி தரூர்
Published on

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த அவர், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசைப் பாராட்டிப் பேசி வருகிறார். இது, தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சசிதரூர் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடியை சசி தரூர் மீண்டும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சசி தரூர் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது. ஆனால் அதற்கு அதிக ஆதரவு தேவை. இந்த முயற்சி உலக அரங்கில் இந்தியாவின் ஒற்றுமையைக் காட்டுகிறது. தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாரம்பரியம் ஆகிய மூன்றில் இந்தியாவின் செயல்பாடுகள் உலக அளவில் சிறந்ததாக வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சட்டபூர்வமான தற்காப்புப் பயிற்சியாகும்.  தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அவசியமானது என்பதை நாங்கள் வெளிநாடுகளிடம் விளக்கினோம். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com