

பெங்களூரு,
பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மத்திய மந்திரி குமாரசாமியின் மருமகனுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூரு சிறையில் குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பிரஜ்வல் ரேவண்ணா செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சிறைக்குள் அவருக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள கைதி சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பெங்களூரு மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் ‘வி.ஐ.பி.’ சலுகைகள் தொடர்பாக ஏற்கனவே சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.கடந்த 2024-ம் ஆண்டு, கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் சிறைக்குள் சக கைதிகளுடன் விருந்தில் ஈடுபட்டதாகவும், செல்போனில் பேசுவது போன்ற காட்சிகள் வெளியானதாகவும் சர்ச்சை ஏற்பட்டது
2024-ம் ஆண்டு, ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷன், சிறைக்குள் விருந்து கொண்டாடிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சிறை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நடிகர் தர்ஷன் மேலும் 3 பேருடன் அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதேபோல், சிறையில் இருந்தபடியே நடிகர் தர்ஷன் செல்போனில் பேசுவது போன்ற வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகள் பலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தர்ஷன் பலாரி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் விதிமுறைக்கு மாறான சலுகைகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர்.சிறைகளுக்குள் தனிப்பட்ட செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கைதிகள் அனுமதிக்கப்பட்ட தகவல் தொடர்பு வசதிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் சிறைத்துறை கண்காணிப்பில் உள்ள தொலைபேசி, பொது அழைப்பு மையம் அல்லது குறிப்பிட்ட காணொலி அழைப்பு வசதிகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.