மேற்கு வங்க கவர்னருடன் உள்துறை அமைச்சக குழு சந்திப்பு

மேற்கு வங்காள சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கரை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
மேற்கு வங்க கவர்னருடன் உள்துறை அமைச்சக குழு சந்திப்பு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி நடந்தது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பா.ஜனதாவினரை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில், 14 பா.ஜனதாவினர் கொல்லப்பட்டதாகவும், ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி மறுத்தார். பா.ஜனதா வெற்றி பெற்ற இடங்களில்தான் வன்முறையும், மோதலும் நடப்பதாக அவர் கூறினார்.

இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு மேற்கு வங்காள மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஆனால், மாநில அரசு அறிக்கை அனுப்பி வைக்கவில்லை. அதையடுத்து, நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியது.

இனியும் காலதாமதம் செய்யாமல், வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இதை கடுமையாக அணுகுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது. அதன்பிறகும் மாநில அரசு அறிக்கை அனுப்பவில்லை.

இதையடுத்து, மேற்கு வங்காள சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கரை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

மேலும், மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கான காரணங்கள் குறித்து விசாரிக்கவும், களநிலவரத்தை ஆராயவும் 4 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனுக்கு வருகை தந்த உள்துறை அமைச்சக குழு மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கரை சந்தித்துப்பேசியது. கவர்னர் ஜெகதீப் தங்கரிடம், மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அறிக்கை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com