

ஐதராபாத்
தெலுங்கானாவில் கர்ப்பிணி சகோதரி படுகொலைக்கு பல மாதங்களாக காத்திருந்து சகோதரன் பழிக்குப்பழி வாங்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
தெலுங்கானாவின் ஜெக்தியால் மாவட்டத்தில் மாதாப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் வைஷ்ணவி (வயது 20). ரீல்ஸ் எடுத்து யூ-டியூபில் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர்.
இவருடைய வாழ்க்கை மற்றும் பிற விசயங்களை வெளியிட்டு வந்ததில், 50 ஆயிரம் வரை பின்தொடர்வோர் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு ஹரி பாபு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களாக நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. கடந்த மார்ச் மாதம், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
கூடுதல் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை, பிறந்த வீட்டுக்கு பாபு அனுப்பி விட்டார் என கூறப்படுகிறது. பின்னர், வீட்டில் இருந்த மனைவியை பார்க்க ஒரு நாள் பாபு சென்றிருக்கிறார். அன்றிரவு இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர். அப்போதும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அதற்கு முன், வைஷ்ணவி கடைசியாக வெளியிட்ட ரீல்சில், அவர் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்றும் அதற்கான மருத்துவ பரிசோதனையில் முடிவு நன்றாக வந்துள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில், சில மணிநேரத்தில் வைஷ்ணவி மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டு உள்ளார். ஆனால், பாபுவை காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் பாபு, அவருடைய தாயார் லட்சுமி, சகோதரர்கள் ஆனந்த் மற்றும் அசோக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கைது செய்யப்பட்ட பாபுவுக்கு கடந்த ஜூலையில் ஜாமீன் கிடைத்தது. அவர் சில காலம், மக்காச்சோளம் விற்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நிஜாமாபாத் பகுதியில் சிவாஜிநகரில் உள்ள பானிப்பூரி கடை முன் நின்று தண்ணீர் குடித்து கொண்டிருந்தபோது, அந்த வழியே கார் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் ஆயுதத்துடன் ஓடி வந்து பாபுவை தாக்கி படுகொலை செய்துள்ளார்.
இதில், வைஷ்ணவியின் சகோதரரான சந்தோஷ் (வயது 19) இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர் வெளியிட்ட செல்பி வீடியோவில், சகோதரி வைஷ்ணவி படுகொலைக்கு ஹரி பாபுவே காரணம். அதனால், பாபுவை படுகொலை செய்தேன். சகோதரி மரணத்திற்கு பழிக்குப்பழி வாங்கி விட்டேன். பல மாதங்களாக நீதிக்காக காத்திருந்தேன். கடைசியாக நானே போலீசாக மாறி விட்டேன் என கூறியிருக்கிறார்.