கர்ப்பிணி மர்ம மரணம்... வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு

பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருவதும், அதனால் பல்வேறு இளம்பெண்கள் மரணமடைந்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் டெல்லியின் துவாரகாவில் 2 மாத கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோமல் வர்ஷா (22 வயது) என்ற பெண்ணுக்கும், அமன் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அவர்கள் டெல்லியின் படு சராய் பகுதியில் வசித்து வந்தனர். அவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில், வர்ஷா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி வர்ஷா வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்ததாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் அவரது தந்தைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது, வர்ஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் வர்ஷாவின் கணவர் அமன் மற்றும் அவரது வீட்டார் வரதட்சணை கேட்டு தினமும் வர்ஷாவை அடித்து துன்புறுத்தியதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். வர்ஷாவின் மரணத்துக்கு அவரது கணவன் வீட்டாரே காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக வர்ஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






