கேரளாவில் ஓணம் பண்டிகையொட்டி நேந்திரம் வகை வாழையின் விலை வரலாறு காணாத உயர்வு

பண்டிகை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையையொட்டி விலை உயர்வு.
நேந்திரம் வாழைப்பழம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஓணம் பண்டிகையொட்டி நேந்திரம் வகை வாழையின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

வரலாறு காணாத உயர்வு

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் திருவிழா நெருங்கி வரும் வேளையில், தமிழகம் மற்றும் கேரள சந்தைகளில் நேந்திரம் வகை வாழைக்காய் மற்றும் பழத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் வரை கிலோ ரூ. 45 என்ற அளவில் விற்பனையாகி வந்த நேந்திரம் பழம், தற்போது வரத்து குறைவு மற்றும் திடீர் தேவை அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ. 75 முதல் ரூ. 80 வரை உயர்ந்து விற்பனையாகிறது.

மழையால் வாழை சேதம்

ஓணம் பண்டிகை சமையல் மற்றும் பாரம்பரிய 'நேந்திரம் சிப்ஸ்' தயாரிப்பிற்கு நேந்திரம் வகை வாழையே முதன்மையாகப் பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்த நேந்திரம் பழமானது கேரள மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

தமிழகத்தின் முக்கிய உற்பத்தி மையங்களான மேட்டுப்பாளையம், ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கான நேந்திரம் வாழையின் வரத்து நடப்பு வாரத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக நேந்திர வாழை பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் மகிழ்ச்சி

இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், கடந்த சில மாதங்களாக போதிய விலை கிடைக்காமல் நஷ்டத்தைச் சந்தித்த நேந்திர வாழை விவசாயிகளுக்கு இந்த தற்போதைய விலை நிலவரம் சற்றே ஆறுதலைத் தந்துள்ளது. பண்டிகை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com