ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூலை பரிசளித்த பிரதமர் மோடி

ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூலை பரிசளித்த பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'பிரிக்ஸ்' நாடுகள்

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் 'பிரிக்' என்ற பெயர் உருவானது. 2006-ல் அமைப்பு முறையாக உருவெடுத்து, 2009-ல் முதல் உச்சி மாநாடு நடந்தது. தென்னாப்பிரிக்கா இணைந்ததும் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பாக பெயர்பெற்றது.

பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகியவை இணைந்தன. 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ், அமைப்பில் 2025-ல் பெலாரஸ், நைஜீரியா, உகாண்டா உள்பட 10 நாடுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன.

இந்த 21 நாடுகள் உலக பொருளாதாரத்தில் சுமார் 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 26 சதவீதத்தையும் கொண்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா தலைமையில்...

இந்தியா 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை தாங்கி 3 முறை இந்தியாவில் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் 4-வது முறையாக (18-வது) உச்சி மாநாட்டை நடத்துகிறது.

இந்த உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. பிரேசில் அதிபர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கலந்து கொள்கிறார். மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரசும் பங்கேற்கிறார். இவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

புதினுடன் சந்திப்பு

இந்த சந்திப்புகளில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷிய அதிபர் புதினை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் சந்தித்தார். அப்போது புதினுக்கு திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பை பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார்.

எண்ணெய் கொள்முதல்

ரஷிய அதிபருடனான பிரதமரின் பேச்சு வார்த்தையில் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் ஏற்கனவே தெரிவித்தார். ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் அழுத்தத்துக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதால் உலகமே இதை உற்று நோக்குகிறது.

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 31 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதினுக்கு பிரதமர் மோடி வழங்கிய திருக்குறள் புத்தகம்
புதினுக்கு பிரதமர் மோடி வழங்கிய திருக்குறள் புத்தகம்
X

Daily Thanthi
www.dailythanthi.com