

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 126 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, ஆட்சியை தக்கவைக்க தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அசாமில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அசாமில் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, திப்ருகர் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றார். அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பின்னர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி கூறியதாவது: “ஒவ்வொரு தேயிலை தோட்டக் குடும்பங்களின் முயற்சியும் எங்களுக்கு பெருமை அளிக்கிறது. கடின உழைப்பும் விடாமுயற்சியும் அசாமின் பெருமையை உயர்த்தியுள்ளது,” என்று பதிவிட்டுள்ளார். தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து சில தேயிலைகளையும் பிரதமர் மோடி பறித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.