

சிம்லா,
இமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் இன்று காலை 7.15 மணிக்கு, சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பேருந்து பைரகார் நகரில் இருந்து சம்பா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பைரகார்-டிஸ்சா சாலையில், ஆபத்தான 27 கி.மீ. மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.