ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவுக்கு உத்தரவு

ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு பிரியங்காவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவுக்கு உத்தரவு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கு அதிகபட்ச பாதுகாப்பான சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.

பிரதமருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமராக இருந்தால், பதவி விலகிய 5 ஆண்டுகள் வரை அவருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த திருத்தம் கூறியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணமடைந்து சுமார் 30 ஆண்டுகள் நெருங்குவதால், அவருடைய குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு கடந்த ஆண்டு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதற்கு பதிலாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள அரசு பங்களாவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அந்த பங்களாவை காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. கருப்பு பூனைப்படை பாதுகாப்போ, எந்த அரசு பதவியோ இல்லாதவர்களுக்கு அரசு பங்களா வசதி அளிக்க விதிமுறையில் இடம் இல்லை என்று சுட்டிக்காட்டி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆகஸ்டு 1-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அந்த அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி காலி செய்ய தவறினால், விதிகளின்படி, அபராத வாடகை வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது. மத்திய அரசை பிரியங்கா நாள்தோறும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com