கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 6.84 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 936 பேர் மாணவர்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 319 மாணவிகளும் அடங்குவர்.

தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை(ஹால் டிக்கெட்) காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தேர்வு தினமும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதனால் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என்று அரசு மறைமுகமாக கூறியுள்ளது.

மே மாதம் 18-ந் தேதி இந்த தேர்வு நிறைவடைகிறது. கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் கடந்த ஆண்டு(2021) பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com