

புதுச்சேரி,
காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது வழங்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு புதுச்சேரி வந்தார். அவருக்கு கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்பு அளித்தனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மராட்டிய மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 5.20 மணி அளவில் திருவண்ணாமலை வந்தடைந்தார்.
முதலில் அமித்ஷா ரமண ஆசிரமம் செல்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அவரது பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஹெலிபேடில் இருந்து காரில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாலை 5.30 மணி அளவில் சென்றார்.
கோபுரம் வழியாக கோவில் பிரகாரத்திற்குள் சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சாயரட்சை பூஜையில் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு அவர் மனமுருக சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அமித்ஷா சம்மந்த விநாயகரை வழிபட்டார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கோவிலில் பே கோபுரம் வழியாக வெளியே நடந்து வந்து அங்கு திரண்டு இருந்த பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அங்கிருந்து ரமண ஆசிரமத்துக்கு காரில் புறப்பட்டார். கிரிவலப்பாதையில் வழிநெடுகிலும் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
மாலை 6.30 மணி அளவில் அமித்ஷா, ரமண ஆசிரமத்திற்கு வந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து மாலை 6.55 மணிக்கு காரில் புறப்பட்டு 8.30 மணியளவில் புதுச்சேரி வந்தார்.
கவர்னர் மாளிகைக்கு வந்த அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, ராஜசேகரன், செல்வகணபதி எம்.பி., பா.ஜனதா மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
கோரிமேடு எல்லையில் இருந்து கவர்னர் மாளிகை வரை அமித்ஷா செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. அந்த பகுதியில் மத்திய ரிசர்வ் காவல்படை, புதுவை போலீசார் 1,000-க்கும் மேற்பட்டார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுவை மாநில எல்லைகள், நகர் முழுவதும் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கவர்னர் மாளிகையில் இரவு தங்கிய மத்திய மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கோரி மேடு போலீஸ் மைதானம் செல்கிறார். காலை 8.15 மணி முதல் 10.10 மணி வரை அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுவை காவல்துறைக்கு 'ஜனாதிபதியின் வண்ணக்கொடி' விருதை வழங்கி பேசுகிறார்.
தொடர்ந்து காலை 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அவர் நேராக ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு செல்கிறார்.
அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பின் அவர் பகல் 12 மணி முதல் 1 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியின் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிடும் அமித்ஷா பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு முருகா தியேட்டர் சந்திப்பிற்கு செல்கிறார். அங்கு 'ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி' என்ற ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். மதியம் 2 மணிக்கு புறப்பட்டு நேராக புதுச்சேரி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவர்னர் மாளிகையில் இருந்து அவர் கோரிமேடு சென்று விட்டு, புதுச்சேரி விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிரோன், ஆள் இல்லாத விமானம், வான்வழி பறக்கும் சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அவர் செல்லும் சாலைகளில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகளை மூட கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு கவர்னர் மாளிகை, விழா நடைபெறும் கோரிமேடு போலீஸ் மைதானம், அக்கார்டு ஓட்டல் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல்படையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் நகர் முழுவதும் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.