புனே கார் விபத்து சம்பவம்: கைதான சிறுவனின் பெற்றோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

புனே கார் விபத்து சம்பவத்தில் கைதான சிறுவனின் பெற்றோரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
புனே கார் விபத்து சம்பவம்: கைதான சிறுவனின் பெற்றோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த மாதம் 19-ந்தேதி சொகுசு கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஐ.டி. ஊழியர்கள் அஷ்விணி கோஷ்டா மற்றும் அணீஷ் அவாதியா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய மைனர் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே கைதான சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றி வைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றது தொடர்பாக சிறுவனின் பெற்றோர், 2 டாக்டர்கள் உள்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறுவனின் பெற்றோர் மற்றும் அவர்களுக்கு உதவிய அஷ்பாக் மகந்தர் ஆகிய 3 பேரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட நிலையில், மற்ற நால்வரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட 3 பேரின் போலீஸ் காவல் இன்றோடு நிறைவடைந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களது போலீஸ் காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு சிறுவனின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com