

புதுடெல்லி,
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம், அக்கட்சியின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பஞ்சாப் காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் பக்கத்தை சுமார் 1.75 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு, உத்தர பிரதேச முதல்-மந்திரி அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கு ஆகியவை முடக்கப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களில் முடக்கப்பட்ட நான்காவது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் பல அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வருகிறது.இணையவழி திருடர்கள் அந்த டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளனர். மேலும், அவர்களால் அந்த டுவிட்டர் பக்கத்தில் சம்பந்தமில்லாத மற்றும் அர்த்தமற்ற விளம்பரப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.