தூய்மையான பெட்ரோல் ரூ.82-க்கும், எ20 பெட்ரோல் ரூ.70-க்கும் இருக்க வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்

பெட்ரோலுக்காக நுகர்வோரிடம் இருந்து கூடுதல் தொகையை மத்திய அரசு வசூலிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
தூய்மையான பெட்ரோல் ரூ.82-க்கும், எ20 பெட்ரோல் ரூ.70-க்கும் இருக்க வேண்டும்:  கெஜ்ரிவால் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி

தூய்மையான பெட்ரோல் ரூ.82-க்கும், எ20 பெட்ரோல் ரூ.70-க்கும் இருக்க வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால், பெட்ரோலுக்காக நுகர்வோரிடம் இருந்து கூடுதல் தொகையை மத்திய அரசு வசூலிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளதுடன், ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.82-க்கு விற்பனை செய்ய முடியும்.

தூய்மையான பெட்ரோல்

ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த விவகாரம் பற்றி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசுவேன் என கூறினார். இதன்படி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, நம்முடைய நாட்டில் தூய்மையான பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.82-க்கு விற்கப்பட வேண்டும்.

அதுவே நாம் எ20 பெட்ரோலுக்கு மாறினால், அதன் விலை இன்னும் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.70-க்கு இருக்க வேண்டும் என கூறினார். நாட்டில் தற்போது உள்ள ரூ.102 என்பதற்கு பதிலாக, குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்க வேண்டும்.

டீசல் விலை

இதேபோன்று டீசல் விலையையும் குறைக்கலாம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டால், பணவீக்கத்தில் பெரிய தாக்கம் ஏற்படும். மக்களுக்கும் அதிகம் தேவையான நிவாரணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் சார்பாக, உடனடியாக தூய்மையான பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.82-க்கு அரசு வினியோகிக்க வேண்டும். எ20 பெட்ரோல் வினியோகிக்கப்பட்டால், அதன் விலை இன்னும் குறைய வேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய மந்திரி

கடந்த 3-ந்தேதி மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, உலகளாவிய அளவிலான கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தின்போது, நுகர்வோரை நிதி இழப்பில் இருந்து பாதுகாக்கும் வகையிலான முக்கிய நடவடிக்கையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மேற்கொண்டன.

இதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்தன. இதனால், அவற்றிற்கு ரூ.74,781 கோடி வரை இழப்பு ஏற்பட்டது என கூறினார்.

எ20 பெட்ரோல்

சமீபத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையானது, சரிவை சந்தித்துள்ளது. இதுபற்றி குறிப்பிட்ட மத்திய மந்திரி பூரி, உலகளவில் கச்சா எண்ணெய் விலை அடுத்த சில வாரங்களுக்கு இதே அளவில் தொடரும் என்றால், ஒவ்வொருவரும் கேட்பது போன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது என்பது நியாயமுள்ள ஒரு கேள்வியாகவே இருக்கும்.

ஆனால், இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என கணிக்க முடியாது. அதனால், உடனடியாக விலை குறைவு என்பது பற்றி இப்போதே நான் கூறுவது சரியாக இருக்காது என்றும் கூறினார். இந்த சூழலில் தூய்மையான பெட்ரோல் ரூ.82-க்கும், எ20 பெட்ரோல் ரூ.70-க்கும் இருக்க வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com