தொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு

தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சாரோசின் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஜார்ஜ் சாரோஸ் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக அவரது நிறுவனத்துடன் சோனியா காந்திக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென மாநிலங்களவையில் பா.ஜ.க. இன்று கோரிக்கை விடுத்தது.

அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்களும், ஜார்ஜ் சாரோஸ் நிறுவனத்திற்கும் சோனியா காந்திக்கும் இடையேயான தொடர்பை விசாரிக்க வேண்டுமென பாஜக தலைமையிலான கூட்டணி எம்.பி.க்களும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com