சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை புகழாரம்

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு 2008-ம் ஆண்டில் இந்தியாவின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை புகழாரம்
Published on

புதுடெல்லி,

பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய மறைவு பற்றி கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க ஆழ்ந்த அக்கறையுடன் இருந்தவர் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், கூகுள் நிறுவனத்தில் வைத்து கடைசியாக அவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. வெய்மோவின் முன்னேற்றம் பற்றி நாங்கள் பேசினோம். அவருடைய தொலைநோக்கு பார்வை கேட்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது.

அவர், ஒரு அசாதாரண வர்த்தகம் மற்றும் கொடைத்தன்மைக்கான மரபை விட்டு சென்றிருக்கிறார். இந்தியாவில் நவீனத்துவ தொழிலை வழிநடத்தி செல்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஏதுவாக உதவியாக இருந்தவர் என்று தெரிவித்து உள்ளார்.

அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 2008-ம் ஆண்டில் இந்தியாவின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com