

சென்னை
நாட்டில் பல்வேறு துறைமுகங்களை இணைத்து வரும் பிரத்யேக சரக்கு ரெயில் பாதையில், சென்னை துறைமுகத்தையும் இணைக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய வழித்தடங்களில், சரக்கு ரெயில்களுக்கு என பிரத்யேக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் வகையில், இந்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் ஒன்பது முக்கிய மாநிலங்களை இணைக்கும் வகையில் 2,841 கி.மீ. துாரத்திற்கு பிரத்யேக சரக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதையை சென்னை துறைமுகம் வரை இணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை துறைமுகம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து, சென்னை துறைமுகத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில், சரக்கு ரெயில்களுக்கு பிரத்யேக பாதைகள் அமைப்பது முக்கியமான திட்டம். மேற்கு வங்காளம் - குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவை இணைக்கும் வகையில், பிரத்யேக சரக்கு ரெயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இந்த சரக்கு ரெயில் பாதையை சென்னை துறைமுகம் வரை இணைக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகமாக இருக்கும் சென்னையை இணைக்கும்போது, கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் கையாளப்படும் என்றனர்.