

லக்னோ,
தலைக்கு ரூ. 30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தேடப்படும் நக்சலைட்டு பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வாரணாசி அருகே பனாரசில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டு போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட நக்சலைட்டு பிரிஜேஷ் கஞ்சு என்பதும் ஜார்க்கண்ட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும், நக்சலைட்டு தளபதி பிரிஜேஷ் தலைக்கு ரூ. 30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து என்கவுன்டர் நடந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.