

ஐதராபாத்,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுவரை ஆந்திராவில் 11 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் தற்போது 2 லட்சத்து 10 ஆயிரத்து 436 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரம் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 9 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல், கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.