கர்நாடக மந்திரி சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் ரூ.3.45 கோடி பறிமுதல்

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெற்றது தொடர்பான டைரியும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மந்திரி சதீஷ் ஜார்கிஹோளி
Published on

பெங்களூரு,

அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பெலகாவி மற்றும் பெங்களூருவில் உள்ள அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், சிக்கோடி எம்.பியும், சதீஷ் ஜார்கிஹோளியின் மகளுமான பிரியங்காவின் வீடு, மகன் ராகுலின் வீடு மற்றும் அவர்களின் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை

மேலும், சதீஷ் ஜார்கிஹோளியின் மைத்துனரும் வணிக வரித்துறை கூடுதல் ஆணையருமான மஞ்சுநாத்தின் வீடு, அலுவலகம் உட்பட 18 இடங்களில் 2 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3.45 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.2 கோடி மந்திரி சதீஷ் ஜார்கிஹோளியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனையில் அவர் தென்னாப்பிரிக்கா, காங்கோ, ஜாம்பியா ஆகிய நாடுகளில் உள்ள தங்க சுரங்கங்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது. இதுதவிர அவரது சர்க்கரை ஆலை, கட்டு மான நிறுவனம் தொடர்பான ஆவணங்களும் சிக்கின. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெற்றது தொடர்பான டைரியும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அமலாக்கத்துறையின் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com