

புதுடெல்லி,
டெல்லியில் நடந்த 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பது என கூட்டுப் பிரகடனத்தில் ரஷியாவும், சீனாவும் உறுதியளித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு டெல்லி பாரத மண்ட பத்தில் நேற்று தொடங்கியது.
மாநாட்டின் முதல் நாளில் கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையான ஐ.நா. சீர்திருத்தம் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.
மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனமும், காசாவில் முழுமையான போர் நிறுத்தத்தையும் வலியுறுத்தியிருந்த தலைவர்கள், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை குறிப்பிடாமல் தவிர்த்தனர்.
அந்தவகையில் உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஏற்கப்பட்ட கூட்டு பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயக ரீதியாகவும், பிரதிநிதித்துவம் மிக்கதாகவும், திறமையானதாக மாற்றவும், கவுன்சிலின் உறுப்பினர்களில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நியாயமான விருப்பங்களுக்கு ஆதரவளிக்கவும் வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகள் உள்பட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகள் சர்வதேச விவகாரங்களில், குறிப்பாக ஐ.நா.வில், அதன் பாதுகாப்பு கவுன்சிலில் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.
சீனாவும், ரஷியாவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற முறையில், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் உள்பட ஐ.நா.வில் அதிக பங்கு வகிக்க வேண்டும் என்ற பிரேசில் மற்றும் இந்தியாவின் விருப்பங்களுக்கு தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தின.