

புதுடெல்லி,
பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஹூபே மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி - ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். முன்னதாக, ஹூபே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் சீனப்பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு, சீனப்பயணத்தின் போது உங்களது நிகழ்ச்சி நிரலை நேரலையாக தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் நீங்கள் பதற்றமாக உள்ளீர்கள். உங்களுக்கு நினைவூட்டுவதற்காக 2 கேள்விகளை கொடுத்துள்ளேன்.
1) டோக்லாம்.
2) சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. அந்த பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது.
இந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து நீங்கள் பேச வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என பதிவிட்டுள்ளார்.