செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம், சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அமலாக்கத்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்.எல்.ஏ. பொறுப்பில் உள்ளதால் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது. விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு  நீதிபதி அபய்.எஸ். ஓகா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் 320 நாட்களுக்கு மேலாக மனுதாரர் சிறையில் உள்ளார். தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை நிறுவனம் தொடர்புடைய மோசடியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என வாதிட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com