மராட்டியம் ; உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மந்திரி சபையில் இடம்

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மராட்டியம் ; உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மந்திரி சபையில் இடம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

ஆனால் மந்திரி சபை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கேள்விகளை எழுப்பியது. இந்தநிலையில் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இன்று மந்திரிசபை விரிவாக்கப்பட்டது. இதில், மராட்டிய முதல் மந்திரியும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டுள்ளது. விதான் பவன் வளாகத்தில் புதிதாக மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com