

சிவமொக்கா,
சிவமொக்கா அருகே சன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் (வயது 21). நேற்று முன்தினம் அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் சச்சின் கலந்துகொண்டார். இதில் அந்தப்பகுதியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழா முடிந்த பிறகு விருந்தினர்களுக்கு சிக்கன்கறி உணவு பரிமாறப்பட்டது. அப்போது சச்சின், அங்கிருந்து சிக்கன்கறியை மட்டும் எடுத்துக் கொண்டு மது குடிப்பதற்காக கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு சிக்கன்கறியை வைத்து சச்சின் மது குடித்துள்ளார். மதுபோதை தலைக்கேறியநிலையில், கறியின் எலும்பு சச்சினின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் மூச்சுவிட முடியாமல் சச்சின் திணறினார். ஆனால் அங்கு வேறு யாரும் இல்லாததால், சச்சினை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு சச்சின் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சச்சினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.