

மங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பால்பாவிலிருந்து சுப்பிரமணியாவுக்கு அரசு பஸ்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சென்று கொண்டிருந்தது. அப்போது சுப்பிரமணியா அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள், பஸ்சின் முன்னால் சென்றது. அதில் 2 வாலிபர்கள் பயணித்தனர்.
அவர்கள் பஸ்சுக்கு வழிவிடாமல் மோட்டார் சைக்கிளை சாலையில் தாறுமாறாக ஓட்டிச் சென்றனர். இதனால் பஸ் டிரைவர் பஸ்சை ஒட்ட முடியாமல் சிரமப்பட்டார். 2 வாலிபர்கள் சாலையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டிச்சென்றதை பஸ்சில் பயணித்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியா போலீசார் மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து அந்த வாலிபர்களை பிடித்து கடுமையாக எச்சரித்தனர். பின்னர் அவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார், மீண்டும் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.