

புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன.
பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின் மரப்பலகைகள் வைத்து கான்கிரீட் கட்டுமானம் அமைக்கப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கான்கிரீட் சுவற்றில் அமைக்கப்பட்டிருந்த மரப்பலகைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் 7 பேர் இன்று ஈடுபட்டனர்.
இதற்காக புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டிக்குள் 7 தொழிலாளர்களும் இறங்கி மரப்பலகைகளை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக 7 தொழிலாளர்களையும் விஷவாயு தாக்கியது. இதனால் கழிவுநீர் தொட்டிக்குள் 7 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.