உண்ணா விரதம் இருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

உண்ணா விரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
உண்ணா விரதம் இருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி
Published on

புதுடெல்லி,

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணா விரதம் இருந்து வருகிறார். 21-வது நாளாக உண்ணா விரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இந்த போராட்டக்குழுவினர் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள உண்ணாவிரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரது உடல் செயல்பாடுகள் சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் கூறும்போது, "சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலும், ஐகோர்ட்டு உத்தரவின்படியும், அவர் அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூடிய விரைவில் அமைதியான முறையில் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com